ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, சாவகச்சேரியில் இன்று (12) காலை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை, கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல், செம்மணி புதைகுழி விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.








