போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் கைஎறி குண்டுகள், தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகத்தைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், எதிர்காலத்தில் முப்படையினரின் அதிகாரிகளையும் இணைத்துக்கொள்வது குறித்துக் காவல்துறை பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 6 கைஎறி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், நேற்று தெஹிவளையில் இடம்பெற்ற கைஎறி குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். எனினும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








