முல்லைத்தீவு மாவட்டத்தில் World Vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன், பிரதேச செயலகத்தின் தெரிவின் அடிப்படையில் 77 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தூண்டாய் – உப்புமாவெளி கிராம அலுவலர் பிரிவில் 33 குடும்பங்களுக்கும், கேப்பாப்பிலவு கிராம அலுவலர் பிரிவில் 44 குடும்பங்களுக்கும் நேற்று (11) குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, முல்லைத்தீவு சுகாதாரத் துறையினரால் குடிநீரை பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் நீரின் சிக்கனமான பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் World Vision நிறுவனத்தின் அலுவலர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.








