விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நேற்று (14) பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்களும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் இறைவனின் அருளைப் பெற்று மன அமைதியையும் ஆன்மீக நிறைவையும் பெறும் புனித நாளாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விநாயகப் பெருமானின் திருவுருவம் முன்னிலையில் யானை ஒன்று முழந்தாளிட்டு, தனது தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பக்திப் பரவசத்திலும் ஆழ்த்தியுள்ளது.
யானை விநாயகரை வணங்குவது போன்ற இந்த அரிய காட்சி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன், காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.








