கட்சிக் கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு எவருக்கும் அறிவுறுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற தமது கட்சியின் கூட்டத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவித்த சாகர காரியவசம், அவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்ட காணொளிகள் பரப்பப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் பெருமளவில் மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதுடன், அதனை இலங்கையர்களே பயன்படுத்துகின்றனர் எனவும், மதுபானம் அருந்துவதா இல்லையா என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது கட்சிக் கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தி வருமாறு கட்சி சார்பில் எவருக்கும் அறிவுறுத்தப்படவில்லை என்றும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மதுபானம் கொள்வனவு செய்து வழங்கப்படவில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையின் நவீன வரலாற்றில் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு பலவீனமடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் இதுவே முதல் முறையாகும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அனுராதபுர பேரணியை ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் தலைவர்கள் தேர்தல் இல்லாத காலங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்வைக்காமல், தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் முன்வைத்து கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் நிதியும் மக்களின் நேரமும் வீணடிக்கப்படுவதாகத் தெரிவித்த சாகர காரியவசம், இதற்கு பொறுப்பானவர்கள் எதிர்கால அரசாங்கத்தின் முன்னிலையில் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசுவதற்கு பதிலாக பொதுஜன பெரமுன மற்றும் அதன் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருவது, அவரது தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்ப மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு ஆகியவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு, வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு ஆகியவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.








