இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் கிரேப் கட்டு உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
வைத்திய பொருட்கள் விநியோகப் பிரிவு ஊடாக சத்திரசிகிச்சைக்கு தேவையான பேண்டேஜ் உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை சமாளிப்பதற்காக வைத்தியசாலை இயக்குநர்களுக்கு உள்ளூர் கொள்வனவு முறையின் கீழ் வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள மருந்தகங்களில் இருந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சில பிராந்திய வைத்தியசாலைகளில் அந்த நடைமுறை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முன்னணி வைத்தியசாலைகளிலும் இந்த உபகரணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்கு மருந்து இடுதல், சத்திரசிகிச்சைக்குப் பின்னர் காயங்களை மூடுதல் மற்றும் எலும்பு சத்திரசிகிச்சைகளுக்குப் பின்னர் காயங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு இந்த பேண்டேஜ் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், வைத்தியசாலைகளில் போதியளவு பேண்டேஜ் இல்லாத நிலையில், வெளியில் உள்ள மருந்தகங்களில் இருந்து அவற்றை வாங்கி வருமாறு நோயாளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் அறிவுறுத்துவதாகவும் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது வெளி மருந்தகங்களில்கூட இந்த சத்திரசிகிச்சை உபகரணங்களை பெற்றுக்கொள்வது கடினமாகியுள்ளதாகவும், இதனால் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகள் பெரும் நிதிச் சுமையையும் சிரமங்களையும் எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







