சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையகம் தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டுக்குள் உரிமை மீறல்களைக் கணிசமாகக் குறைப்பதற்கான தமது இலக்கை இந்த சந்திப்பின்போது, பொலிஸ் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடுவதற்கான மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு, அமைதியான போராட்டங்களை நடத்தும் உரிமை, பெண் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் இல்லாதது மற்றும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லாமை தொடர்பிலும் ஆணையகம் தமது அதிருப்தியை குறித்த சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் இணைய பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை கையாள்பவர்களுக்கு, அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.