இலங்கை பொலிஸ், 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில், தற்போது பொலிஸ் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளதுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று செயல்படுகின்றது.

அதன் கீழ் சைபர் குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று இயங்குகின்றது.
சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை மொத்தம் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை 5 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அம்பாறை, குருணாகலை, மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் பிராந்திய மட்டத்தில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மூலமும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் அந்தக் குற்றம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.