மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிர் இன்று புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும், அத்துடன் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்று தருவதாகவும், அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை தருமாறும் விவசாயிடம் இலஞ்சமாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர் . அப்போது விவசாயியிடம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைதுசெய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.