தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (03) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டில் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கு எதிராக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைத்த போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.
இந்த மனுக்கள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆராய்ச்சி அதிகாரி லியோனல் குருகே ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.
இதன்போது பதிலளிப்பவர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கின் அடிப்படையாக அமைந்த தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேலும், சர்ச்சைக்குரிய இந்த கொள்முதல் குறித்து கணக்காய்வாளர் நாயகமும் விசாரணை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக அடுத்த வாரம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரால் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்றை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பிற கொள்முதல்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவாலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த மருந்து கொள்முதல் தொடர்பான ஆவணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்று, விசாரணைகளை நடத்த ஆறு மாத கால அவகாசம் வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.