யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது பேசிய அவர் ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை.
சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம்.

1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன்.
மக்கள் தவறாக முடிவெடுப்பதில்லை. என்.பி.பி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.
ஒரு குறிப்பிட்ட சபையில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம்.
சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.
எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.
மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தய் கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால் 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.
மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தீயை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.
தமிழா மக்களை தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விக்கிறோம் எனத் தெரிவித்தார்.