மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில், புதிய தவிசாளர்உபதவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று (12) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் மேகசுந்தரம் வினோராஜின் பெயரும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் சண்கணேசநாதனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவிய வேளையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்வது என சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 10 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த மேகசுந்தரம் வினோராஜ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், 09 வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் சண்முகநாதன் கணேசநாதன் பெற்றுக்கொண்டதுடன், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன்போது தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் போது பிரதி தவிசாளருக்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் அலையப்போடி வசிகரன் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர் கிருஷ்ணபிள்ளை வதனகுமாரும் போட்டியிட்டனர். இதன்போது 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. 10 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த அலையப்போடி வசிகரன் பெற்றுக்கொண்டார், கிருஷ்ணபிள்ளை வதனகுமாருக்கு 09 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.