தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று முன்தினம் (14) ஆசிரியர் மற்றும் அதிபர், தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்த பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து கல்வி அமைச்சு முறையான ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளன.

அண்மைய ஆசிரியர் நியமனங்கள், முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தற்போது கல்வி அமைச்சின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்த தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
இச் சந்திப்பில், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.