வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவார்களிடமிருந்து 13 இலட்சம் ரூபா பணம், கெரோயின்-5கிராம் 750 மில்லி கிராம், 5கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பெண் வியாபாரி 40 வயதுடையவர் என்றும் அவர் நீண்டகாலமாக வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்ககையின் பின்னர் விடுதலையாகியிருந்தார்.

இருந்தபோதிலும் அவர் தனது வியாபார நடவடிக்கையினை பொலன்னறுவை வீதி நாவலடி பகுதிக்கு இடம்மாற்றி மேற்கொண்டு வந்த நிலையில், பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பேரில் அவர் அதே இடத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று மற்றைய நபர்மாவடிச்சேனை வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவர் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கி பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததோடு போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தொரிவித்தனர்.

மேற்படி கைது நடவடிக்கையானது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.ஆர்.பண்டார ஆலோசனையின் பேரில் ஊழல் ஒழிப்பு அதிகாரி கே.எஸ்.பி. அசங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள் இவர்களாகும். இவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு ஆர்பாட்டங்களை நடாத்தி வந்திருந்தனர். ஆனால் பொலிசார் இவர்களை கைது செய்வதில் இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் இன்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம் பெற்றதுடன் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலையடைந்துள்ளனர்.








