பஸ் சாரதிகளுக்கு சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், அத்தகைய புதிய சட்டம் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என்றும், சீட்பெல்ட் அணிவது 2011 முதல் நடைமுறையில் உள்ள சட்டம் என்றும் இலங்கை பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பொதுப் போக்குவரத்து மற்றும் பிற வாகனங்களின் சாரதிகளுக்கு சீட்பெல்ட் அணிவது, 2011 ஆகஸ்ட் 9 அன்று வெளியிடப்பட்ட 1718/12 என்ற ஆசாதாரண வர்த்தமானி அறிவித்தலின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சில ஊடகங்கள் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், நீண்ட நேரம் சீட்பெல்ட் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்று தவறாக தெரிவித்ததாகவும் பொலிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இது புதிய சட்டத் தேவையல்ல, மாறாக, நாட்டில் தினசரி பதிவாகும் உயிரிழப்பு மற்றும் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக, நீண்டகாலமாக இருக்கும் சட்டத்தை மீண்டும் வலியுறுத்துவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், 1981 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன (திருத்த) சட்டத்தின் 169வது பிரிவை மேற்கோள் காட்டி, ஒரு சாரதி தொடர்ச்சியாக நான்கரை மணி நேரம் வாகனம் ஓட்டிய பின் 30 நிமிட இடைவெளி எடுக்க வேண்டும் மற்றும் 24 மணி நேரத்தில் 10 மணி நேர ஓய்வு பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
சீட்பெல்ட் பயன்பாடு குறித்த இந்த நினைவூட்டல், நாடு முழுவதும் பதிவாகும் அதிர்ச்சியளிக்கும் வாகன விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் தலைமையகம், சாரதிகளை ஒழுக்கமாகவும் சட்டத்தைப் பின்பற்றியும் இருக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.








