மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வீதிகளில் நகர சபையின் அனுமதியின்றி போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டடப் பொருட்களை இறக்கிவைப்பவர்களுக்கெதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நகர சபையின் தவிசாளர் எம்எஸ். நழீம் அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் போக்கவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில் வீதிகளில் இறக்கப்படும் பொருட்களை அரச உடைமையாக்கவதற்கான சட்ட விதிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றத்தின் அங்கீகாரமின்றி நிர்மாணப்பணிகள் மேற்கொள்வதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டார்.
ஏறாவூர்ப்பிரதேசத்தில் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டட ஒப்பந்தக்காரர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
கொந்துறாத்துக்காரர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப்பணிகளுக்காக கல் மற்றும் மண் போன்ற மூலப்பொருட்களை வீட்டுமையாளர்கள் அல்லது கொந்துறாத்துச் செய்பவர்கள் பல நாட்கள் இறக்கி வைப்பதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடு கிடைப்பதாக நகர சபையின் செயலாளர் எம்எச்எம். ஹமீம் இங்கு சுட்டிக்காட்டினார்.
கட்டடங்களின் நிர்மாணப்பணிகளுக்கான மூலப்பொருட்களை தவிர்க்க முடியாத காரணத்தினால் போக்கவரத்துத் தடையின்றி வீதியோரம் ஒருசில நாட்கள் இறக்கிவைப்பதற்கு நகர சபையில் அனுமதி பெறப்படவேண்டுமென அவர் மேலும் கூறினார்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துச் செய்யும் நேரங்களில் வீதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டட நிர்மாண மூலப்பொருட்கள் இறக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
கட்டட ஒப்பந்தகாரர்கள் வியாபார அனுமதிப்பத்திரம் பெறுதல், நிர்மாணிப்பின்போது ஒப்பந்தகாரரின் விபரம் குறிக்கப்பட்ட பெயர்ப்பலகை காட்சிப்படுத்தல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், கட்டடத்தின் படிகளை வீதிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைத்தல், கட்டட உடைவுகளை வீதிகளில் குவித்தல் போன்ற செயற்பாடுகள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டுமென இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அயலவர்களுடன் பிணக்குகளை ஏற்படுத்தும் வண்ணம் யன்னல் அமைத்தல், மலசல கூட குழிகளை நிருமாணித்தல், கழிவுநீர்க்குழி அமைத்தல் மற்றும் மழை நீர் வடிந்தோடுவதற்கான பீலி அமைத்தல் போன்ற செயற்பாடுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டுமென தவிசாளர் நழீம் கேட்டுக்கொண்டார்.








