முன்னாள் பிரதமரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன, மாகாண சபை முறைமை தொடர்பாக நாடளாவிய ரீதியில் மீளாய்வு மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை இன்றைய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தகுந்ததா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த பல வருடங்களாக மாகாண சபைகள் இல்லாமலேயே நாடு இயங்கி வந்துள்ளதையும், மாகாண சபைத் தேர்தல்கள் 2014ஆம் ஆண்டு ஊவா மாகாணத்திற்குப் பிறகு நடைபெறாததையும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முறைமை தொடர்பான சட்ட சிக்கல்கள் காரணமாக இந்தத் தேர்தல்கள் தாமதமாகி வருகின்றன.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கம் அடுத்த வருடம் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது. ஆனால் தினேஷ் குணவர்தன, மாகாண சபைகள் கடந்த காலங்களில் பயனற்றதாக இருந்ததாகவும், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் பெரும் நிதி செலவழிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைகள் இல்லாமலே நாடு இயங்கும் சூழ்நிலையை முன்னிட்டு, இந்த முறைமையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டுமா, மாற்றியமைக்க வேண்டுமா அல்லது முழுமையாக நீக்க வேண்டுமா என்பது தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, மாகாண சபைமுறைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டபோதும் வெற்றியடையவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை விஜயத்தின் போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டியது குறித்து வலியுறுத்தியிருந்தார்.
தினேஷ் குணவர்தன, தற்போதைய கால சூழ்நிலைகளில் மாகாண சபை முறைமை தேவையா என்ற கேள்வி எழுப்பப்படுவது இயல்பானது என்றும், உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாக இயங்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களே அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மாகாண சபைகள், அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்றத்திற்குப் போவதற்கான இடைநிலையான தளமாகவே இருக்கின்றன என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும், தற்போது அவை இல்லாமல் போனால் அந்த மக்களுக்கு தீர்வுகள் வழங்கும் வாய்ப்பே இல்லாமல் போகும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கல்வி, சுகாதாரம், முதலீடு, விளையாட்டு போன்ற துறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களே மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் மூலமாக செயற்பட முடியும் என்றார்.
அதற்காக மாகாண சபைகள் தேவையில்லை என்றும், இம்முறையில் கடந்த காலங்களில் பெரிய முன்னேற்றம் இல்லாததையும் குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலத்திலும் வடக்கு மாகாணத்தில் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.








