ஓட்டமாவடி பிரதான வீதியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அரச வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.
“சுவாசிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவோம்” என்ற தொணிப்பொருளின் கீழ், வளி மாசடைதலை தடுக்கும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் வாகன புகை பரிசோதனை திட்டம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், அதிக புகை வெளியிடும் வாகனங்களும், கூடுதல் உதிரிப்பாகங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களும் அடையாளம் காணப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சோதனையில் தேர்ச்சி பெற்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், வளி மாசடைதலைத் தடுக்கும் அவசியம் குறித்து சாரதிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த நடவடிக்கையை மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் கே.கே.என்.எம். குணதிலக தலைமையில், கொழும்பு தலைமையக தொழில்நுட்ப உதவியாளர் என்.எம்.எம். மர்சூக் ஒருங்கிணைத்தார். வாழைச்சேனை பொலிஸார், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ட்ரைவ் கிரீன் தொழில்நுட்ப வல்லுநர்களும் இச் சோதனையில் பங்கேற்றனர்.



















