எதிர்வரும் 18 ஆம் தேதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று (17) களுவாஞ்சிக்குடி நடைபெற்றது
“இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக எதிர்வரும் 18 ஆம் தேதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானத்து இருக்கின்றோம்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் முத்தையன்கட்டில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி கொண்டு வந்த இந்த வட கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களும் பூரண அனுசரனையினை தந்தமைக்கு தவிசாளர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம் பெறக்கூடாது. தமிழர்களுக்கு எந்த அநீதியும் இடம்பெறக்கூடாது. இதுதான் கடைசியாக நடைபெற்ற தமிழரின் உயிரிழப்பாக இருக்க வேண்டும். ஏன் இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்கிறோம் என்றால் எங்களுடைய நிலைமை அனைத்தும் சர்வதேச அளவுக்கு செல்ல வேண்டும், சர்வதேசம் உண்மையில் எங்களுக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும்.
புதிய அரசாங்கங்கள் வருகின்ற போது அரசாங்கங்கள் மாறுகின்றதே தவிர அவர்களது கொள்கைகள் இதுவரையில் மாறவில்லை. அவர்கள் உண்மையில் சிங்கள கொள்கையில் இருந்து அவர்கள் இன்னமும் மாறவில்லை தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு அரசாங்கம் வரும்போதும் எங்களை பாரிய அளவு எதிரியாக நினைக்கின்ற சிங்கள கட்சிகள் அனைத்திற்கும் சரியாக பாடமாக இருக்க வேண்டும். என்றனர்.








