குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025), இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். இதன்மூலம், உலகின் மரியாதைக்குரிய மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.
உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நாடுகள், பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களின் மத்திய வங்கி ஆளுநர்களின் செயல்பாடுகள் இந்த அறிக்கையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் சுதந்திரம் போன்ற முக்கியப் பகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு இந்த மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் கலாநிதி வீரசிங்கவின் தலைமைத்துவம் மற்றும் மூலோபாய அறிவு ஆகியவை இந்த மதிப்பீட்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக குளோபல் ஃபைனான்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. அவரது பயனுள்ள கொள்கைகளும், உறுதியான நடவடிக்கைகளும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளன.








