மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று (13) வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, பத்து தினங்கள் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதையடுத்து, பாலமுருகப் பெருமான், பாலவிநாயகர், சிவன், பார்வதி ஆகிய திருவுருவங்கள் எழுந்தருளி, பக்தர்களின் உற்சாகக் கோஷங்களுடன் தீர்த்தோற்சவத்திற்காக புறப்பட்டன. புனிதத் தீர்த்தக் கங்கை என அழைக்கப்படும் சரவணப் பொய்கையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது வேல் ஏந்தி தீர்த்தம் ஆடிய சிவாச்சாரியார் திடீரென பரவச நிலைக்குள் ஆழ்ந்து மூர்ச்சையடைந்த நிகழ்வு, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இம்மஹோற்சவத்தில், அடியார்கள் கற்பூரச் சட்டி மற்றும் காவடிகள் ஏந்தி நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். தீர்த்தோற்சவம் பக்தி, ஆன்மீக உணர்வுகள் நிறைந்த சூழலில் நடைபெற்றது.
























