கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என தமிழ் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது எனவும், இதற்கு தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல். எப். கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“புதிய அரசாங்கம் கடந்த ஜனாதிபதிகள் சிறப்பு உரிமைகளின் கீழ் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகவாழ்கையில் ஈடுபடமுடியாது என ஊழல் மோசடி துஸ்பிரயோகத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை கடந்த கால ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் இனபடுகொலை புரிந்துள்ளதுடன், இனப்பிரச்சனை தொடர்பாக எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இது மட்டுமல்ல மக்களின் விரிப்பணத்தை அறவிட்டு அந்த வரிப்பணத்தில் இருந்து துஸ்பிரயோம் செய்து வந்ததற்கு எதிராக கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டியது அவர்களது இறைமையாகும்.
ஆனால் சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏன்? மௌனம் காக்க வேண்டும் என வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி மிக உச்சகட்டத்துக்கு வந்துள்ளது எனவே தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.








