சர்வதேச மதுசார தடுப்பு தினத்தை (அக்டோபர் 3) முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) வெளியிட்ட ஊடகச் செய்தியில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் அரசாங்க பட்ஜெட்டில் மதுசாரத்திற்கான வரியை முறையான முறையில் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ADIC வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் தினசரி சுமார் 50 பேர், வருடாந்தம் சுமார் 20,000 பேர் மதுசாரப் பாவனையால் அகால மரணமடைகின்றனர். மேலும், 2022 ஆம் ஆண்டில் மதுபானத்தால் நாட்டுக்குத் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார செலவு ரூ. 237 பில்லியனாக இருந்த போதிலும், அதே ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ. 181.1 பில்லியன் மட்டுமே.
அமைப்பின் அறிக்கையில், 2022க்குப் பிந்தைய காலத்தில் மதுசார உற்பத்தி குறைந்திருந்த போதிலும், தொடர்ச்சியான வரி உயர்வுகளால் (ஜூன் 2023 இல் 20%, ஜனவரி 2024 இல் 14%, ஜனவரி 2025 இல் 6%) வருவாய் அதிகரித்துள்ளதாகவும், இது அரசுக்கு சாதகமாக இருந்ததோடு பாவனையையும் குறைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADIC, புதிய அரசாங்கம் மதுசாரம் தொடர்பான சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்காக கீழ்காணும் நடவடிக்கைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது;
*பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து அறிவியல் அடிப்படையிலான வரிச்சுட்டெண் அறிமுகப்படுத்தல்.
*சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் தேசிய மதுசாரத் தடுப்பு திட்டங்களை முன்னெடுப்பது.
*தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்தல்.
*மதுசார உரிமங்கள் வழங்கலில் கட்டுப்பாடுகள் விதித்தல்.
*சட்டவிரோத மதுசார உற்பத்தி தடுப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தல்.
ADIC, இவ்வாறு சரியான கொள்கைகள் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் மதுசாரம் தொடர்பான சுகாதார மற்றும் பொருளாதார சுமை குறையுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.








