புதிய இணைப்பு
மொறக்கொட்டான்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து, முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்ற வேளை, அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பஸ் வண்டி ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை மொற கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி கொண்டு வந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்து கொண்டிருந்த போது பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் அதில் போதைப்பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
முதல் இணைப்பு
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் கருங்காலிச் சோலை பேத்தாழையைச் சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவரும் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் இவர்கள் சென்ற முச்சக்கரவண்டியானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட பரிசோதனையின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 200 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடான் அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








