இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் கட்சியின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலா நாசகார செயல் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் புல்லு மலை வட்டார உறுப்பினர் சிவானந்தனின் வீட்டிற்கு கடந்த (18) இரவு இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் அதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கை இன்னும் நாசகார சாதிக் குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில். நாட்டில் இன்று வரை வன்முறை சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இன் நிலையில் தமிழரசுக் கட்சி, ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் நடைபெற்ற பல்வேறு படுகொலை சம்பவங்களுக்கு எதிராக போராடி வரும் அதேவேளை ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல படுகொலைகள் குறித்த சாட்சியங்களை அரசுக்கு வழங்கி உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் ஒருவர். அவர் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுவப்படுவதற்கு எதிராக மிகத்தீவிரமாக செயற்பட்டு அதற்கு எதிராக பிரதேச சபையினால் பிரேரணை ஒன்றை முன்வைத்து அதன் ஊடாக புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவருடைய வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது ஒரு நாசகார சதிச் செயல்; இந்த சம்பவத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள், உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இவ்வாறான நாசகார சதிச் செயல் எமது கட்சியின் சுதந்திரமான செயல்பாட்டிற்கும், கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் தான் தமிழரசுக் கட்சிக்கு இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றால், அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலும் தமிழரசுக் கட்சியின் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தி பொலிஸார் சிறந்த முறையில் விசாரணைகளை நடாத்தி குறித்த சம்பவம் யாரால்? எதற்காக? என்ன நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.








