கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இடங்களை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டபோது 8 பேரை கைது செய்ததுடன் 503 அரை லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்டுள்ளதாக அந்த அந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் இலுக்கு பொத்தான காட்டை அண்டிய பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக கரடியனாறு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான நேற்று (20) குறித்த பகுதியை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை170,000 மில்லிலிட்டர் கோடா மற்றும் 20,000 மில்லிலிட்டர் கசிப்புடன் கைது செய்தனர்.

இவ்வாறு கொக்கட்டிச்சோலை பொலிசார் பட்டிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்து வரும் நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 பேரை கைது செய்ததுடன் 114 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதனை தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேரை 3 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேரை 6 அரை லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை, மட்டக்களப்பு ஏறாவூர் நீதிமன்றங்களில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிசார் தெரிவித்தனர்.








