உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும்.
அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெவ்வேறு விடயப் பரப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.
அவர்களை வலுப்படுத்துவதன் ஊடாகவே எமது மாகாணத்தின் அடிமட்ட அலகான உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.








