வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் குறித்த ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? எனவும் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதுதொடர்பான விடயங்களை தாம் சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவிடம் முன்வைத்திருப்பதாகவும், மிக விரைவாக குறித்த வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்புகையில்,
அவையை தலைமை தாங்கும் உறுப்பினரே! சுதேச மருத்துவத்துறைக்கு இம்மாதம் தங்களால் வழங்கப்பட்ட 303 மருத்துவர் நியமனங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக வடமாகாணத்திற்கான 36 மருத்துவர் நியமன முன்மொழிவுகளில் 29 மருத்துவர் முன்மொழிவுகள் வன்னி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன.
குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் நிலவிய பெரும்பாலான சுதேச மருத்துவர் வெற்றிடங்கள் தற்பொழுது நிரம்பியுள்ளன. வன்னிமாவட்டத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மேற்படி மருத்துவர் நியமனங்களுக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அமைச்சர்! அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 63. தற்போது இங்கு 35 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 45 சதவீதமான ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன.
2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே.
சுகாதார அமைச்சரே! எனது முதலாவது கேள்வி சுதேச மருத்துவத் துறையில் தரமான மருத்துவ சேவை வழங்கலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் வன்னி மாவட்டத்தில் மட்டுமல்ல. இத்தேவை வடமாகாணம் முழுதும் காணப்படுகிறது.
வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஏனைய ஆளணி வெற்றிடங்களை 2026 ஆம் ஆண்டு பகுதியளவிலேனும் நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ளதா?
இந்நிலையில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது பதிலளிக்கையில்,
மிக்க நன்றி உறுப்பினரே, உண்மையில் நெடுங்காலமாக ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. ஆகவே ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்தகங்களிலும், வைத்தியசாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவியது. அந்த வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு 304பேரை ஆட்சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும், 303 பேர் வருகைதந்திருந்தனர்.
அதேபோல் நீங்கள் சொல்கின்ற மருந்துக் கலவையாளர்கள், அத்தோடு சமையல் காரர்களின் ஆளணிப் பற்றாக்குறையினாலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. உதவியாளர்களுடைய ஆளணிப் பற்றாக்குப் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆகவே அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவிற்கு நாங்கள் இந்தவிடயங்களை முன்வைத்திருக்கின்றோம்.
மிக விரைவாக இந்த ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வோம். முக்கியுமாக ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளிலுள்ள ஆளணிப்பற்றாக்குறைக்கு மிக விரைவாக தீர்வுகள் எட்டப்படும் எனப் பதிலளித்தார்.








