அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 4,131 பேர் இந்த ஆண்டில் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்விச் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்வி நிர்வாக சேவைக்கு இந்த ஆண்டு 502 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அதேபோல் ஆசிரியர் கல்விச் சேவைக்கு 580 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 04ஆயிரத்து 131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆகவே அதிபர் சேவையில் நிலவும் வெற்றிட பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் போராட்டம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தெரியாத விடயங்களை சபையில் கூறுகின்றார். இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி வெளியிடப்பட்டு, விண்ணப்பம் கோரப்பட்டது.
2023.03.25 ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னர் இந்த வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 04 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சியின் தொழிற்சங்கத்தினர்தான் நீதிமன்றம் சென்றார்கள்.
இந்த மனுக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்போம்.








