இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம். எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள்.
அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது. அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளலாம் என்ற ஆலோசனைகளை அனைவரும் முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகின்றேன். இரவு பகலாக அவர் முழு மூச்சாக செயற்படுகின்றார்.அவருக்கும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.








