அரச அதிகாரிகளுக்கு எதிராகவோ பிரதேச செயலகத்தினையோ முற்றுகையிடப்போவதாக தமது கிராமத்தில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையெனவும் தமது கிராமத்தில் உள்ள பொது அமைப்புகள் என்று கூறி ஊடக சந்திப்பினை செய்தவர்கள் எந்த பொது அமைப்பின் பிரதிநிதிகளும் அல்ல என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமீன்மடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், ஆலயங்களில் நிர்வாகம், விளையாட்டுக்கழகம், இளைஞர் கழக தலைவர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (21) மாலை பாலமீன்மடுவில் நடைபெற்றது. இதன்போது அவர்கள்மேலும் தெரிவித்ததாவது,
பாலமீன்மடு கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிருவாகிகள், பொதுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ளோம்.
இதிலே நாங்கள் தெளிவுபடுத்த இருக்கும் விடயமானது, கடந்த சில நாட்களாக எமது பாலமீன்மடு கிராமத்தின் பெயரைப் பயன்படுத்தி சில தேவையற்ற ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே பாலமீன்மடு கிராமத்தின் பொது அமைப்புகள் சேர்ந்து இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகின்றோம்.
கடந்த 16ம் திகதி சில நபர்களினால் பாலமீன்மடு கிராமத்தின் பொதுச் சங்கங்கள் ஒன்றிணைந்து பிரதேச செயலகத்தை முற்றுகையிவோம் என்று கூறியிருந்தார்கள். அந்த விடயத்திற்கும், அதாவது பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அரச ஊழியர்களுடைய செயற்பாடுகளை முடக்குவோம் என்கின்ற அந்த ஊடக சந்திப்புக்கும், பாலமீன்மடு கிராம பொதுச் சங்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, நாங்கள் அவ்வாறானதொரு முடிவும் எடுக்கவில்லை. இதனை நாங்கள் முதற்கண் மறுக்கின்றோம்.

நிவாரணம் தொடர்பான விடயத்தில், தொடர்ச்சியாக எமது பிரதேச செயலக உத்தியோத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எமது பிரதேச அமைப்புகளோடு ஒன்றிணைந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக கிராமத்திலே சில ஆய்வுகளை மேற்கொண்டு இங்குள்ள குறைநிறைகளை நிரப்புவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நேரத்திலே எமது பிரதேச செயலாளர், பிரதேச செயலக ஊழியர்கள், அரச ஊழியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கலந்துகொண்ட நபர்கள் எமது பாலமீன்மடு கிராமத்தின் எந்தவொரு பொது அமைப்பிலும் எந்வொரு பதவிநிலைகளிலும் இல்லை. அவர்களுக்கும் எமது பொது அமைப்புகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அவர்கள் வெறுமனே எதேச்சதிகாரமாக பாலமீன்மடு பொது அமைப்புகள் என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். பாலமீன்மடு பொது அமைப்புகள் என்ற வகையில் நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும், எமது பாலமீன்மடு கிராமத்திலே இடம்பெறுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக அந்தப் பிரச்சனைகளை எவ்வாறு நாங்கள் அரச அதிகாரிகளோடு அணுக வேண்டும், இதற்கான தீர்வுகளை எவ்வாறு பெற வேண்டும என்ற நிலைமை எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதை விடுத்து நாங்கள் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை முடக்குவதோ, அல்லது அதற்கெதிரான போராட்டங்களை நடத்துவதற்கான எண்ணப்பாடோ இற்றைவரை பாலமீன்மடு கிராமத்தில் இல்லை.
நாங்கள் கடந்த காலத்திலே ஒரு பேராட்டத்தினை நடத்தியிருந்தோம். அது எமது மீனவர் சமூகத்தை இலக்கு வைத்து எமது கிராமத்திலே ஒரு மதுபானசாலையொன்று திறக்கப்பட இருந்தது. அதற்காகவே பொது அமைப்புகள் இணைந்து ஒரு போராட்டத்தினை நடத்தயிருந்தோம். அதனை விடுத்து அரச அதிகாரிகள் ரீதியில் ஏதேனும் தவறுகள், முறைகேடுகள் இருந்தால் அதனை நாங்கள் அவர்களோடு, பிரதேச செயாலாளர், கிராம உத்தியோகத்தர்களோடு இணைந்து நேரடியாகக் கலந்துரையாடி அதற்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதே எங்கள் நோக்கம். அந்த வகையிலேயே நாங்கள் இதுவரை மேற்கொண்டு வந்துள்ளோம். அதனை விடுத்து நாங்கள் அதிகாரிகளின் அலுவலகங்களுக்குச் சென்று அவர்களின் செயற்பாடுகளை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எமது பொது அமைப்புகள் சார்பில் இற்றைவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.








