மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு அந்த பகுதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விஷமிகள் என தெரிவித்த கருத்தை அந்த பகுதி பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (22) ஊடக மாநாடு இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் 85 வீதமானோர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது 95 வீதமான வீடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த மாநகர சபை உறுப்பினரின் சிபாரிசுக்கு அமைய 25 பேருக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு முறைகேடு இடம்பெற்றுள்ளது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் அமிர்தகழி யைச்சேர்ந்த சயந்தன் மற்றும் லைற்கவுஸ் கிளப், கோயில் ஒன்றின் நிர்வாகத்தினர் இணைந்து எமது சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என கருத்து தெரிவித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்க பட வேண்டும்.
அதேவேளை இந்த நிவாரணம் வழங்குவதில் குளறுபடி இடம் பெற்றதை சுட்டிக்காட்டியது பிழையா? 95 வீதமானோர் பாதிக்கப்பட்டிருந்த போதும் வெறும் 25 பேருக்கு மட்டும் நிவாரணம் பணம் வாங்குவது நியாயமா? இந்த குளறுபடியை மூடி மறைப்பதற்காக இவ்வாறு கருத்து தெரிவித்து கிராம மக்களை இரண்டாக பிரிப்பதற்கு மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
நாங்கள் அனைவரும் இந்த கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருவதுடன் மீனவர் சங்கத்தின் தலைவர் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்க தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற கிராம சேவகர், பிரையா பொலிஸ் குழு தலைவர், ஓய்வூதிய சங்க தலைவர் உட்பட பல பொது அமைப்புக்களின் நீண்டகாலமாக இருந்து செயல்பட்டு வருகின்ற எங்களை ஒரு அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை, விசமிகள் என பொய்களை கூறி, இடம்பெற்ற மோசடியை மூடி மறைக்க செயற்பட்டு வருகின்றனர்.
எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி செயற்பட்டு வரும் எமது கிராமத்தைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என தெரிவித்துள்ளமை எமது கிராம மக்களையும் இழிவுபடுத்தும் செயல் என்பதுடன் இந்த கருத்தை வன்மையாக கண்டனம் தெரிவித்தனர்.








