ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கத்தியுடன் நடமாடிய இலங்கை இளைஞர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை மதியம் டோக்கியோ, மினாடோ-கு பகுதியில் உள்ள சினகாவா ரயில் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள யோஷினோயா என்ற உணவகத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கத்தியொன்றை கையில் வைத்துக்கொண்டு, தனது கழுத்தில் வைத்து அழுத்தியபடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போல பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளார்.
இதனால் அவரது கை மற்றும் கழுத்துப்பகுதிகளில் இரத்தக் காயம் ஏற்பட்ட போதிலும், அவர் சுயநினைவுடனேயே காணப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஜப்பானிய பொலிஸார், அந்தப் பகுதியை உடனடியாக சுற்றிவளைத்து பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர்.
நீண்ட நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார், அவரை சமாதானப்படுத்தி கத்தியை கீழே போட வைத்தனர். இதனையடுத்து, வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.









