டிட்வா (Ditwah) புயல் காரணமாக இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் “தேசிய பாதுகாப்பு தினம்” நிகழ்வுகள் மாவட்ட மட்டத்தில் சர்வமத பங்களிப்பு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட உள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி, காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை, காலி – பேரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்படும்.

அதன்படி, 2025 டிசம்பர் 26ஆம் திகதி காலை 9.25 முதல் 9.27 மணி வரை, நாடு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியில் பங்கேற்குமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில், இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.
இதனை நினைவுகூரும் வகையில், 2005ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” அறிவிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வுகள் பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.








