உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்குப் பொலிஸார் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளில் வெளிப்படும் உண்மைகளின் அடிப்படையில், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஊடக வலையமைப்புகள் உருவாக்கப்படுவது குறித்த புலனாய்வுத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அனர்த்த காலங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பொலிஸாரின் இத்தகைய செயற்பாடு மக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. எம்பிலிப்பிட்டிய பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்த இடத்தை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டமையால், அதற்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி வெளியிடும் வரை, பொலிஸாரிடம் இருந்த சாட்சியங்களை மறைத்து வைத்திருந்தமையின் நோக்கம் தான் என்ன? குறித்த உத்தியோகத்தர் மீதான தாக்குதலுக்கும் போதைப்பொருள் நடவடிக்கைக்கும் நேரடித் தொடர்புள்ளது. அதனை உறுதிப்படுத்தத் தேவையான சாட்சியங்கள் உள்ளன. ஆகையால், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அந்த நிறுவனம் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.








