அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் முழு நாட்டையும் பாதித்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக உருவான விசேட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பின்னரான முகாமைத்துவப் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சின் விடயப்பரப்பிற்குள் உள்ள நாடளாவிய மற்றும் இணைந்த சேவைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படும் தினம் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்குப் பின்னர் அறிவிக்கப்படும் திகதியிலிருந்து, வருடாந்த இடமாற்றச் சுழற்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் வெளியிட்ட PSC/APL/VAT/2025 இலக்கத்தையும் 2025 டிசம்பர் 18 ஆம் திகதியையும் கொண்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









