இலங்கையில் சட்டங்கள் வெவ்வேறாக செயற்படுகின்றது. சிறுபாண்மையின மக்களுக்கு ஒரு நீதியும், பெரும்பாண்மையின மக்களுக்கு இன்னுமொரு நீதியும் இந்நாட்டில் தொடர்ந்துவரும் ஆட்சியாளர்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வட கிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளூமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணபுரம் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் வழக்குத்தொடுக்கப்பட்ட அப்பிரதேச மக்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் குருந்தூர் மலை விவகாரத்தில் சிறியதொரு இடத்தில் தொல்பொருள் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அது விகாரை என கண்டறியப்படவில்லை. ஆனால் விகாரை தான் இருந்தாக கருதி அதனைச் சூழவுள்ள 1000ஏக்கர் காணியினை தொல்பொருள் திணைக்களத்தினர் எல்லையிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த கண்ணபுரத்தில் இந்த ஆலயம் தொல்பொருள் சான்று என கருதப்பட்டால் மக்களாகிய நீங்கள் சிந்தித்து பாருங்கள் இதனைச் சூழவுள்ள 1000ஏக்கர் என்றால் எவ்வளவு பிரதேசத்தை அவர்கள் ஆக்கிரமிப்பார்கள் என்பதை சிந்தியுங்கள்.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பியங்கல என்னும் இடத்திலும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு விகாரைதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டால் அங்கு எந்தவிதமான கட்டுமாணங்களை செய்வதாக இருந்தால் தொல்பொருள் திணைக்களத்தினரின் அனுமதி பெற வேண்டும்.
பியங்கல என்ற இடத்தை பார்வையிட சிங்கள மக்கள் வருகை தரும்போது வழிபடுவதற்கு விகாரை தேவை என அதனை கட்டினார்கள் . பின்னர் அதனை பூசை வழிபாடுகள் செய்ய விகாராதிபதி பின்னர் அவர் தங்குவதற்கு வீடு, தானம் வழங்குவதற்கு மக்கள் குடியேற்றம் என விஸ்தரித்துள்ளார்கள்.
ஆனால் தமிழர் பிரதேசங்களில் உள்ள தொல்பொருள் பிரதேசங்களில் அனுமதி மறுக்கப்படுகின்றது. மீறினால் பிணையில்லாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
கடந்த மாதம் வாழைச்சேனை நீதிமன்றம் பிரதேச சபையின் அனுமதியின்றி தொல்பொருள் பதாகை நட முடியாது என தீர்ப்பளித்துள்ளது. பிரதேச சபைகள் தமிழரசுக் கட்சி வசம் உள்ளதால் இதற்கு அனுமதி மறுக்கப்படும். இதேவேளை தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைகளில் ஆட்சியில் இருந்தால் இலகுவாக எமது நிலங்கள் பறிபோகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இந்த நிலைமையினை வன்மையாகக் கண்டித்து வட கிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தயாராகி வருகின்றேன். இதற்கு மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
எங்கே நடாத்தப் போகின்றோம்? எப்போது நடாத்தப்போகின்றோம் என்பதை நடாத்துவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னரே அறிவிப்பேன். தற்போது கூறினால் புலனாய்வாளர்களுக்கு இலகுவாகி விடும் அவர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா? அவர்கள் தேடிக்கண்டுபிடிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.








