துபாய்யில் மறைந்து வாழ்கின்ற பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் ஒசாத் பெர்ணாண்டோவின் தகப்பன் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டும் என்கிற செல்ல பெயரில் அறியப்படுகின்ற ஒசாத் பெர்ணாண்டோ வெளிநாட்டில் இருந்து கொண்டே போதை பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.
இவரின் தகப்பன் குலசூரிய லசந்த பிரதீப் பெர்ணாண்டோ – வயது 49 என்பவரை இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.
இவரின் உடைமையில் இருந்து 503 கிராம் ஹெரோயின், 14 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய். கைப்பற்றப்பட்ட பணம் போதை பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12 வங்கி அட்டைகள், 03 கைப்பேசிகள், ஒரு சிறிய மின்னணு தராசு, ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு வான் வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள்.
இவர் கட்டுவபிட்டிய வீதியில் மாத வாடகை ஒரு இலட்சம் ரூபாய் வீடு ஒன்றை எடுத்து தங்கி இருந்து இந்த போதைப்பொருள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரின் மகன் மொத்தமாக வழங்குகின்ற ஹெரோயினை சிறு பொட்டலங்களாக பிரித்து மகனால் சொல்லப்படுகின்ற இடங்களுக்கு விநியோகிப்பதே இவரின் முக்கிய பணி என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.








