நாட்டில் பாதுகாப்பான, விபத்துகள் இல்லாத மற்றும் போதைப்பொருள் அற்ற பொது போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில், பொது போக்குவரத்து சாரதிகளுக்கான புதிய போதைப்பொருள் பரிசோதனை திட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்குளிய அரச பேருந்து டிப்போவில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு மொபைல் மருத்துவ ஆய்வு வாகனம் பயன்படுத்தப்பட்டு, பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடமிருந்து சிறுநீர் மாதிரிகள் பெறப்படுகின்றன.

இந்த நவீன பரிசோதனை முறையின் மூலம், கஞ்சா (Cannabis), ஐஸ் (Ice), பாபுல் (Babul), ஹெரோயின் (Heroin)
என நான்கு வகையான ஆபத்தான போதைப்பொருட்கள் உடலில் இருப்பதை கண்டறிய முடியும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த பரிசோதனைகளின் முடிவுகள் 10 நிமிடங்களுக்குள் உடனடியாக வழங்கப்படுகின்றன.
இந்த திட்டம் கூடிய விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கே.எஸ்.எம். சமரசேகர கருத்து தெரிவித்ததுடன், நேற்றைய போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான சபை விவாதத்தில், இனி மதுபானம் மாத்திரமன்றி வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும் சோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் போக்குவரத்து சட்ட ஒழுங்கு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.










