பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
2026 ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்ட நபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதே வேளை இலங்கையில் 2021.04.13 ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச இருந்த போது 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
- ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
- சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
- ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
- அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
- ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
- தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர்அத்தபாவிய்யா
- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
- ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
- அல்கய்தா அமைப்பூ
- சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
- சுப்பர் முஸ்லிம் அமைப்பு
அத்துடன் மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின்
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது,
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது,
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது,
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது,
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது,
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோஅல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது,
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது,
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(க) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது, என வர்த்தமானி அறிவித்தல் அறிவித்தல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் (Gazette) எனது பெயர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, ஒரு சுருக்கமான மற்றும் பொறுப்பான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்.
நான் எந்தவித வன்முறை, தீவிரவாத அல்லது சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதையும் பயங்கரவாதம் தொடர்பான எந்த குற்றச்சாட்டிலும் எனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டதோ இல்லை என்பதையும் தெளிவாக தெரிவிக்கிறேன்.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் (gazette) வெளிப்படையான சில உண்மைத் தவறுகள் காணப்படுகின்றன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள “Super Muslim” என்ற பெயரில் இலங்கையில் எந்த அமைப்பும் இல்லை. “சஹாபி தரீகா” என்ற சொல், நபியவர்களின் தோழர்களான சஹாபாக்களின் வழிமுறையை மட்டுமே குறிக்கிறது. இது ஒரு அமைப்போ, தீவிரவாதக் குழுவோ அல்ல, மாறாக பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்களிலும் தவறுகள் உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் ஒன்று எனக்கு சொந்தமானதல்ல.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் அல்லது ஒன்லைன் இணைப்புடன் எனக்கு எந்தவித தொடர்பும் அல்லது அறிவும் இல்லை. இவ்வாறான தவறுகள் தீவிரமான கவலைக்குரியவையாகும்.
இந்த நிலைமை தவறான தகவல்கள் அல்லது தவறான அடையாளம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இது எனது பக்கம் இருந்து நிரூபிக்கப்பட்ட எந்தச் செயல்பாட்டினாலும் ஏற்பட்டதல்ல. இந்த விடயம் எனது மரியாதைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், தொழில்முறை செயல்பாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நான் சரியான சட்ட நடைமுறைகளின் மூலம் சட்ட நிவாரணங்களை நாடியுள்ளேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையான மனுக்களை சமர்ப்பித்துள்ளேன்.
நான் சட்டத்தையும் அரசியலமைப்பையும் இலங்கை நீதித் துறையையும் முழுமையாக மதிக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
எனது விளக்கங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து அதன் தீர்ப்பை மரியாதையுடன் எதிர்பார்க்க உள்ளேன்.
ஊகங்களைத் தவிர்த்து, சட்ட நடைமுறைகளுக்கு மரியாதை செலுத்துமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.









