மட்டக்களப்பில் தீவிபத்தில் தனது வர்த்தக நிலையம் எரிந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் பொலிஸாரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது கவலைக்குரியது என மட்டக்களப்பு நகர் வர்த்தகர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்த எனது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்தது. இதன்போது கோடிக்கனக்கில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் எனது ஹோட்டலில் பணியாற்றியவர்களே எனக்கு தகவல் தந்தார்கள். நான் ஆரம்பத்தில் இது ஒரு மின் ஒழுக்காக இருக்கும் என்றே கருதினோம். ஆனால் எனது வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகள் எனக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது.
இதன்போது எனது வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தங்கியிருந்த வர்த்தக நிலையத்தின் சீசீரிவி கமராவினை பரீசோதனை செய்தபோதுஅவர்களின் கருத்துகள் எனக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் நவம்பர் மாதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் சென்று குறித்த சீசீரிவி காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகளை வழங்கியிருந்தேன். இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கூறியிருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.
வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தானது மின்னொளுக்கினால் ஏற்பட்டதாக மின்சாரசபை அறிக்கை தந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் மின்சாரசபைக்கு சென்று அதன் பொறியியலாளரிடம் கேட்டபோது தாங்கள் எந்த அறிக்கையினையும் வழங்கவில்லையென தெரிவிக்கின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி செயலகங்களுக்கும் அறிவித்துள்ளேன்.
எனது ஹோட்டல் எரிக்கப்பட்ட சம்பமானது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்ற சந்தேகம் பலமாகவுள்ளது. இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.








