நாட்டில் இனவாதம் இல்லை என ஜனாதிபதி கூறினாலும், அதற்கு மாறாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இனவாதத் தன்மை கொண்ட செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவியதாகவும், ஆனால் 2026ஆம் ஆண்டிலும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நெருங்கியுள்ள போதும், அரசியற்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காணி விடுவிப்பு தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார். மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில பாதைகள் திறக்கப்பட்டாலும், அவை நேரக் கட்டுப்பாட்டுடன் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் வன இலாகா, மகாவலி, தொல்பொருள் தொடர்பான பிரச்சினைகள் ஒன்றரை ஆண்டுகளாக தீர்வின்றி உள்ளதாகவும், கெவிலியாமடுவில் சட்டவிரோதமாக குடியேறிய பெரும்பான்மை சமூகத்தினருக்கு காணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொல்பொருள் ஆக்கிரமிப்புகள் தொடர்வதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மூலம் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சாணக்கியன் எச்சரித்தார்.
அதேவேளை, பூரணை தினத்தில் தையிட்டிக்கு வந்து வழிபாடு செய்வோர் குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்ற அவர், சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரை மற்றும் திருகோணமலையில் உள்ள புத்தர்சிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

கல்வி மறுசீரமைப்பு முக்கியமானதாக இருந்தாலும், சமூகக்கல்வி மற்றும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும், 1948க்குப் பின்னரான வரலாறுகள் உட்பட தமிழ் மன்னர்களின் பங்கு பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2026 கல்வி மறுசீரமைப்பில் இவை சரிசெய்யப்படாவிட்டால், எதிர்வரும் தலைமுறைகளுக்கு தமிழர் வரலாறே தெரியாத நிலை உருவாகும் என எச்சரித்த சாணக்கியன், கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தமிழர் கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.








