காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்பட்ட சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 17ம் ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டு, பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்யுமாறும் கட்டளை பிறப்பித்தார்.
குறித்த சட்டத்தரணியை இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சட்டத்தரணி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகியதுடன், வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், உவைஸ், ரூபி, உதயாகரன், சுதர்சன், கமலதாசன், நஜீபா, ரம்சீயா, தவராசா, சசிதரன், ஆஜராகி சமர்ப்பனங்கள் முன்வைத்தனர்.
இதன் போது பொலிசார் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை அதனால் விசாரணை முடியவில்லை என நீதவானிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.








