நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் மகன் மேரியஸ் போர்க் ஹொய்பி மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 38 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சுயநினைவற்ற அல்லது இயலாத நிலையில் இருந்த நான்கு பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு சம்பவம் அவரது பெற்றோரின் (அரச குடும்பத்தின்) இல்லத்திலேயே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலையான 27 வயதுடைய மேரியஸ், பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், உடல் ரீதியான தாக்குதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியமை போன்ற சில குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு ஒருபுறமிருக்க, அவரது தாயாரான இளவரசி மெட்டே-மேரிட் மீதான விமர்சனங்களும் நோர்வேயில் வலுவடைந்துள்ளன.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், இளவரசி மெட்டே-மேரிட் எப்ஸ்டீனுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியமைக்கான 900-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த காரணத்தால், ‘Sex and Society’ எனும் அமைப்பு தனது வருடாந்த விருது வழங்கும் நிகழ்விலிருந்து இளவரசியை காப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
“தவறான மதிப்பீடு” செய்துவிட்டதாக இளவரசி ஒப்புக்கொண்ட போதிலும், இது குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வலியுறுத்தியுள்ளார்.
மேரியஸ் போர்க் ஹொய்பி அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் இளவரசியின் மகன் என்பதால் இந்த விவகாரம் நோர்வே மன்னராட்சியின் கௌரவத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.
இதேவேளை, மன்னராட்சியை ஒழிப்பது தொடர்பாக நோர்வே நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நேற்று நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








