கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, அலபலாவலவத்துர மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
விமானப்படையின் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல வனவிலங்கு அலுவலகம், குருநாகல் வனவிலங்கு உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் குருநாகல் நாரம்பெத்த விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த முற்றுகையில் இணைந்திருந்தனர்.

குறித்த வல்லப்பட்டை சுமார் 1050 கிலோ எடை கொண்டது.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மான் கொம்புகள் உட்பட மற்றும் பல்வேறு கடத்தல்பொருட்களுடன் ஒரு லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








