Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. பிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஶ்ரீநேசன், வைத்தியர் இ. சிறிநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேரடி களவிஜயத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் கருத்துகளை முன்வைத்தார். அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவப்பட்டபோது, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். கல்வி தொடர்பான விவாதத்தில், கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஈரளக்குளம் பாடசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக கல்வி அதிகாரியுடன் கருத்துக்கள் பகிரப்பட்டன.
மேலும் மனித–யானை மோதல் தொடர்பில், வாழைச்சேனை பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து மூவர் படுகாயமடைந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், யானைகளை காட்டுப் பகுதிகளுக்குள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த வன ஜீவராசி திணைக்களத்தின் மேல் அதிகாரி, ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், யானைகளை காட்டிற்குள் கொண்டு செல்ல விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேசமயம் கருமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வியாபார நிலையம் அமைப்பது மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு, குறித்த திட்டத்தை கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.








