அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தளத்திற்குப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் அடைந்துள்ள வெற்றியை யாராலும் நம்ப முடியாது. ஒரே அடியில் ஈரானின் 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் தலைமைத்துவமே இப்போது சிதைந்துவிட்டது,” என்று மார்தட்டியுள்ளார்.
திட்டமிட்டதை விடவும் மிக வேகமாக இந்த இராணுவ நடவடிக்கை நகர்வதாகவும், இது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்குமே நன்மை பயக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க இராணுவத் தரப்பிலிருந்து ஒரு வருத்தமான செய்தியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மற்ற இடங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இவ்வளவு மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் புதிய தற்காலிகத் தலைமை (New Leadership) அமெரிக்காவுடன் பேச விரும்புவதாக டிரம்ப் ஒரு இரகசிய ராஜதந்திரத் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ‘The Atlantic’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்:
“அவர்கள் (ஈரான் புதிய தலைமை) இப்போது பேச விரும்புகிறார்கள், நானும் அதற்குச் சம்மதித்துள்ளேன். கண்டிப்பாக நான் பேசுவேன். ஆனால், இதை அவர்கள் முன்பே செய்திருக்க வேண்டும். மிகத் தாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் இப்போது மிக இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.”
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றமும், டிரம்ப் தரப்பு காட்டும் அதிரடியும் உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.








