கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானிக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியிடமிருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்ததாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த உரையாடலின் போது, கத்தாரில் மேற்கொள்ளப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க தளங்களை குறிவைத்தவையாகும்; கத்தாரைத் தாக்கும் நோக்கம் இல்லையென அராக்சி தெரிவித்துள்ளார்.
ஆனால், கத்தாரின் உள்நாட்டு குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்குதலுக்குள்ளானதை சுட்டிக்காட்டி, அத்தகைய கூற்றுகளை அல்-தானி முழுமையாக நிராகரித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள், பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் அணுகுமுறை என அவர் கண்டித்ததுடன், ஈரான் தனது அண்டை நாடுகளை பாதிக்கவும், தங்களுக்கு சம்பந்தமில்லாத போரில் கத்தாரை இழுக்கவும் முயல்கிறது என குற்றம்சாட்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், பிராந்திய கூட்டாளிகள் மீது ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அல்-தானி வலியுறுத்தியுள்ளார்.
கத்தார் எப்போதும் உரையாடல் மற்றும் தூதரக தீர்வுகளை ஆதரித்து வந்தாலும், தனது இறையாண்மை, பாதுகாப்பு அல்லது நிலப்பரப்பு ஒருமைப்பாடு மீறப்பட்டால் அதற்கு தக்க பதிலடி வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் வெளிவிவகார அமைச்சகத்தின் படி, சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்பு உரிமையின் அடிப்படையில், ஈரானின் இந்த தாக்குதல்கள் பதிலின்றி விடப்படமாட்டாது எனவும் அல்-தானி எச்சரித்துள்ளார்.








