மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் 18 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கன் குனியா நோயாளர்களும் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வீடுகள் மற்றும் காணிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றி சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் இளைதம்பி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (5) வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் உள்ள கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் வீடுகள் பரிசோதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், மாநகரசபை அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயல்பட்டனர்.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக சில வாரங்களாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொக்குவில் பகுதியில் 12 பேரும், கோட்டமுனை பகுதியில் 6 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் பராமரிப்பு இல்லாத வெற்றுக்காணிகளை சுத்தம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நுளம்புகள் மூலம் பரவும் சிக்கன் குனியா நோயாளர்களும் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.













