இன்று (மார்ச் 6) அதிகாலை கத்தாரில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளமான அல்-உடைத் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாலை 3:45 மணியளவில் நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலம், “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” என கட்டளையிட்டது.

கத்தார் எமிரி வான் பாதுகாப்புப் படை (Qatar Emiri Air Defence Forces) நவீன ரேடார் கருவிகள் மூலம் இலக்கை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, அது தளத்தை நெருங்குவதற்கு முன்பே வான்வெளியிலேயே அழித்தது. சரியாக 3:57 மணியளவில் அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக வளைகுடா நாடுகளில் இத்தகைய தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், கத்தார் தனது வான் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத் திறனுடன் செயல்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
அதேசமயம் கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) அல்லது உள்துறை அமைச்சகம் (MoI) இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் வெளியிடவில்லை.








